Sunday, July 13, 2014

இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு : — பாகம் : 07

இரண்டாம் கலீஃபா உமர் பின்
———————————————————
கத்தாப் (ரலி) வாழ்க்கை
————————————————
வரலாறு :
———————
பாகம் : 07
———————

இக்கட்டானச் சூழல் :
—————————————

இப்போது நபிகளார் (ஸல்) அவர்கள் “தஃபிரான்” பள்ளத்தாக்கில் முஸ்லிம்களுடன் இருக்கும் சமயம் முன்னரே நபிகளாரால் எதிரிகளை வேவு பார்க்க அனுப்பப்பட்ட முஸ்லிம் ஒற்றர்கள், அபுசுப்யானின் வியாபாரக்கூட்டம் தப்பித்த மற்றும் மக்கா படையினரின் படை பலம் அவர்களின் பத்ரில் தங்குதல் குறித்த முடிவைப் பற்றிய செய்திகளை கொண்டு வந்தனர். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியை நன்கு ஆராய்ந்த நபி(ஸல்) அவர்கள், தனது தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி முழுமையான வீரத்துடனும், துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

அதற்க்கான காரணங்கள் :
—————————————————

1- மக்கத்து குறைஷி காஃபிர்களை எதிர்க்காமல் விட்டால், அந்த பகுதியில் தங்கள் ராணுவம் மற்றும் அரசியல் செல்வாக்கை அவர்கள் நிலை நிறுத்துவார்கள் இதனால் முஸ்லிம்களின் துன்பம்.,துயரம்
இன்னும் தொடரும்.

2 – அவர்களை எதிர்க்காமல் திரும்பினால், அவர்கள் மதினாவரை வரமாட்டார்கள் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.

3- இதன் மூலம், மற்ற அரபு தேசத்தவர்களுக்கும் துணிவு பிறக்கும், அவர்களும் மதினாவை தாக்க வருவார்கள்.

4 -இதனால் முஸ்லிம்களுக்கு அந்த பகுதியில் கேவலமும், அவமானமும் ஏற்படலாம். இஸ்லாத்தின் மீது வெறுப்பும் பகைமையும் ஏற்படலாம். இதனால் இஸ்லாமிய அழைப்பு பணி தனது வலிமையை இழந்து விடலாம். மேற்கண்ட காரணங்களை கூறி அனைவரிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது சிலரது உள்ளங்கள் தங்களிடம் இருந்த குறைவான படை பலம் மற்றும் போர் சாதனங்களை கண்டும்
தங்களின் எதிராளிகளின் பலத்தைக் கண்டும் இந்த கடுமையான போருக்கு தயங்கினர்.

அப்போது சிலரது உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கின. இந்த கடுமையான போருக்கு பயந்தனர்.

இதனைப் பற்றி அல்லாஹ்
—————————————————
தனது திருமறையில் :
——————————————
كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَيْتِكَ بِالْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ

(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.

يُجَادِلُونَكَ فِي الْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُونَ

அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).

وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ

(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.

لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).

(அல்-குர்ஆன் : 08 : 05 TO 08).
எனக் கூறுகின்றான்.

எனினும் படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபுபக்ர்(ரலி) அவர்கள் எழுந்து அவர்களிடையே அழகாக பேசினார்கள். பின்பு, உமர்(ரலி) எழுந்து வீர உரை நிகழ்த்தினார்கள். அதே போல், மிக்தாத்(ரலி) அவர்களும் வீர உரை நிகழ்த்தினார்கள். இவரின் உரையை கேட்டு நபி(ஸல்) அவர்கள் பாராட்டி புகழ்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

வீர உரை நிகழ்த்திய மூவரும் முஹாஜிர்கள் மக்காவை சார்ந்தவர்கள் ஆவர் ஆனால் அவர்கள் படையில் அவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதனால் நபி(ஸல்)களார் அன்ஸாரிகளான மதீனா வாசிகளின் கருத்துகளை கேட்கவிரும்பினார்கள். காரணம், படையில் அன்ஸாரிகளே அதிகமாக இருந்தார்கள். மேலும் போரின் முடிவு அன்ஸாரிகளையே மிகவும் பாதிக்க கூடியதாக இருக்கும்.

நபி(ஸல்) அவர்கள் அன்ஸாரி தோழர்களின் கருத்தை அறிந்து கொள்ள முயன்றதற்கு இன்னொரு காரணம் முன்னர் அவர்களுடன் அகபாவில் செய்து கொண்ட உடன்படிக்கையில், அன்ஸாரிகள், மதினாவிற்கு வெளியே சென்று போர் புரிய வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. எனவே, அன்ஸாரிகளை மனதில் கொண்டு “மக்களே! ஆலோசனை கூறுங்கள்” என்று, நபி(ஸல்) அவர்கள் பொதுவாக கூறினார்கள்.

அண்ணலாரின் நோக்கத்தை புரிந்து கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடம் கேட்பது போல் தெரிகிறது” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.

ஸஅது இப்னு முஆது(ரலி) அவர்கள் எழுந்து பின் வருமாறு கூறினார்கள்:
——————————————————

நாயகமே இறைத்தூதரே
“நாங்கள் உங்களை விசுவாசித்தோம், உங்களை உண்மையானவர்கள் என்று நம்பினோம், நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென சாட்சி கூறினோம், இதை ஏற்று உங்களின் கட்டளைகளை செவிமடுத்தோம், அதற்கு கட்டுபடுவோம் என்று உடன்படிக்கையும், ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம். எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள். உங்களை அனுப்பிய இறைவன் மீது ஆணையாக! நீங்கள் எங்களை அழைத்துக்கொண்டு கடலுக்குள் மூழ்கினாலும் நாங்களும் மூழ்குவோம். எங்களிடமிருந்து ஒருவரும் பின் தங்கிவிடமாட்டார். எதிரிகளை சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம் இதனை அன்ஸாரிகளின் சார்பாக கூறுகின்றேன்” என்று அவர்கள் கூறினார்கள். அவரின் பேச்சையும் உற்சாகத்தையும் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆனந்தம் அடைந்தார்கள்.

பின்பு, “நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இபோது பார்ப்பதைப் போன்று இருக்கின்றது” என்று கூறினார்கள்

இஸ்லாமிய படை தனது பயணத்தை தொடர்ந்தது. ஃதபிரான் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, அஸாஃபிர் வழியாகச் சென்று, “தப்பா” என்ற இடத்தை அடைந்து, பின்பு அங்கிருந்து மலை போன்ற பெரிய மணற்பாங்கான குன்றான ஹன்னானை வலப்பக்கம் விட்டுவிட்டு பத்ருக்கு சமீபமாக வந்திறங்கினார்கள். அங்கிருந்து தனது தோழர் அபுபக்ர்(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் மக்கா படையினர் எங்கு கூடாரமிட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள புறப்பட்டார்கள் அப்போது எதிரே வந்த முதியவர் ஒருவர் மூலம், மக்கா படைகள் கூடாரமிட்டுள்ள பகுதியை அறிந்து கொண்டு திரும்புகிறார்கள்.

அன்று மாலை, எதிரிகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள முஹாஜிர்களில் உள்ள மூன்று தளபதிகளான, அலி(ரலி), ஸஅது இப்னு அபீவக்காஸ்(ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) ஆகியோரை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் மூவரும் பத்ரின் தண்ணீர் உள்ள உள்ள இடத்திற்கு சென்ற போது, அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் விசாரித்த போது, மக்கா படைகளுக்காகவே தண்ணீர் எடுக்க வந்ததாக கூறினார்கள். மேலும் அவர்களை விசாரித்த போது, “நீங்கள் பார்க்கும் அந்த பெரிய மேட்டிற்கு பின்னால் குறைஷிகள் உள்ளனர்” என்றனர். “அவர்கள் எத்தனை பேர்?” என்று கேட்டதற்கு, “மிக அதிகமாக உள்ளனர்” என்றார்கள். “அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, “ ஒரு நாள் ஒன்பது ஒட்டகங்கள், மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்” என்று கூறினார்கள். “அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் இருக்கலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கணக்கிட்டார்கள். மேலும், குரைஷி பிரமுகர்களில் யாரெல்லாம் வந்து இருக்கிறார்கள் என்ற தகவலையும் கேட்டு பெற்றதோடு ....

அவர்கள் மக்களை நோக்கி, “இதோ! மக்கா தனது ஈரக்குலைகளை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கிறது” என்றார்கள்.



No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே