Monday, July 21, 2014

அகம்பாவம் பிடித்த இஸ்ரலே,,,உனது கொடுங்கோலின் நுனி உனக்கான கல்லறையைச் செதுக்கும்


அகம்பாவம் பிடித்த
இஸ்ரலே,,,

உனது ஆட்சிக்கான
சாவுமணியை
நீயே அடிக்கிறாய்..
நாமென்ன செய்ய..?

உன் அழிவுக்கான குழியினை
நீயே வெட்டுகிறாய்…
யார் என்ன செய்ய..?

உனது அகங்காரங்கள்
உனக்கான பாடையை
அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ
அறிய மாட்டாய்…

உனது கொடுங்கோலின் நுனி
உனக்கான கல்லறையைச் செதுக்கும்
உளியென்பதை நீ
உணர மாட்டாய்…

மனிதத்தையும் மனிதர்களையும்
எரித்துக் குளிர் காய்பவனே…
பிணங்களின் மீதமர்ந்து
பிறைச் சோறுண்பவனே…

உன் அரசாசனத்தை
அக்கினி சூழ
அதிக நாட்களில்லை…!

ஆமாம்…
உனது ஆணவ நடை
ஓயும்..
உன் அகம்பாவக் குடை
சாயும்…!

உனது மாட மாளிகைகள்
மண்ணோடு புதையும்;
கூட கோபுரங்கள்
குப்பை மேடாகும்!

எங்களின் தயவாலும்
நீ சூடிக் கொண்ட மகுடம்
இன்னும் சில நட்களில்
எரிந்து சாம்பலாகும்…

உனது
கொற்றம் முடங்கும்…
அத்தோடுன்
கொட்டம் அடங்கும்…!

அப்பாவிகளைக் கொன்று
பிணமலை சமைத்தவனே..உச்சியில்
கோரக் கொடியேற்றி
இரத்த கீதம் இசைத்தவனே…

எட்டு நரகத்தின் வாயில்களும்
உன்னை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன…!

உன் அதிகார வில்லிலிருந்து
நீ செலுத்தும்
அம்புகளை
அம்பறாத்தூணிக்குள்
அடக்கி வை…

உறுமய வாள்களை
உறைக்குள் போட்டுக் கொள்…

நீ மறந்துவிட்ட
அன்பின் போதனைகளை
மறுபடியும் மறுபடியும்
ஞாபகம் கொள்…

இல்லையேல்..
சிறுபான்மையென
நீ கருதும்
எம் பாலஸ்தீன
பிஞ்சுகளின்
சாபம்
ஒருநாள்
உன்னைச் சிதைத்துச்
சீரழித்துச் சின்னாபின்னமாக்கிவிடும்..

ஜாக்கிரதை இஸ்ரவேலே,,
ஜாக்கிரதை,,!

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே