ஆணவக்காரன் அபூ ஜஹ்ல் :
——————————————————
நாம் முன்னரே கூறியது போல் இஸ்லாமியர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்குப்பிடிக்கத் திணறிய குறைஷிக் குஃப்பார்களின் படை செய்வதறியாமல் பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓட துவங்கியது
ஆனால் ஆனவமே தன்னிருப்புக்கு அடைக்கலம் தேடும் அபுஜஹல் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், திமிருடன் தனது படையினரை உற்சாகப்படுத்திக் கொண்டும் போர்புரியும் படி வெறியூட்டிக் கொண்டும் இருந்தான்....
இரு சகோதரர்கள் :
————————————
இப்போது முஸ்லிம் படையனியைச் சார்ந்த அன்சாரிச் சகோதரர்களும் அஃப்ராவின் மக்களுமான இரு இளைஞர்கள் இல்லை இல்லைச் சிறுவர்கள் எனக்கூறுவதே சாலச்சிறந்தது.....
அதில் ஒருவர் முஆது (ரலி) மற்றவர் முஅவ்விது (ரலி) இருவரும் போரின் போது முறையே வலம் இடமாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கருகில் நின்று தீரத்துடன் போர் புரிகின்றனர்.
போரின் உக்கிரம் தகிக்கும் பாலையை விட வெப்பமாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம்.... இரத்த வெள்ளம் பத்ரின் வென்மணலை செஞ்சிகப்பாய் அடித்துக் கொண்டிருக்கும் சமயம்..,
தங்கள் அருகில் நின்று போர் புரியும்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களை பெரிய தந்தையே என விளித்து எமக்கு தாங்கள் அபூ ஜஹ்லை யார் எனக் காட்டுங்களேன் எனக் கேட்க்கின்றனர்
அதற்கு அவர் ஏன்? என்று கேட்கிறார். அப்போது அவர்கள்
“எங்கள் உயிரினும் உயர்ந்தவரும் யாருக்கு எத்தீங்கும் எவராலும் ஏற்ப்பட அனுமதியோமோ அத்தகைய உத்தம உயர் திரு நபியை அவன் துன்புறுத்தியதாகவும் வசைபாடியதாகவும் நாங்கள் கேள்வி பட்டோம், ஆகையால் அல்லாஹ்வின் மீது சபதம் எடுத்துள்ளோம், அந்த ஒப்பற்ற ஓரிறையின் மீதானையாக ஒன்றுஅவனை கொல்லுவோம், அல்லது நாங்கள் மடிவோம்” என்று வீராவேசமாகக் கூறினார்கள்.
அப்போது தனது குதிரையில் உலாவிக்கொண்டும், படையினரை உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்த அபுஜஹலை அவர் காண்பித்தார்.
அவ்வளவுதான் இரை தேடும் இராஜாளியாக., வேட்டைக்குச் செல்லும் வேங்கைகளாக அவன் மீது இந்த இரண்டு சிறுவர்களும் சீறிப் பாய்ந்தனர்.
இதனைப்பற்றி பின்வரும் ஹதீது இவ்வாறு விவரிக்கின்றது :
3988. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர். அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து (இந்தச் சிறுவர்களுக்கு பதில் வேறு வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே இவர்களால் போரின் போது என்ன உதவி எனக்கு கிடைத்து விடும் என நினைத்து) நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், “என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?“ என்று கேட்டேன். அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்” என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார். அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா“வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. பாடம் : (நபிகளார் காலத்துப்)போர்கள்
(நூல்:புகாரி 3988)
இப்போது அபூ ஜஹ்லுக்கருகில் காற்றினும் வேகமாய் கடுகிச்சென்ற இந்த இருவருக்கு மத்தியில் யார் அவனை முதலில் கொல்வது என்ற போட்டியே நடந்தது.
அபு ஜஹ்லோ முழுமையான போர் அணிகலன்கள் தரித்தவனாக குதிரையின் மேல்.... இவர்கள் இருவருமோ இருக்கும் பொருட்களே போர்ச் சாதனங்களாக இறைவனின் உதவியே கேடயமாகக் கொண்டு தரையில் நின்றவர்களாக சண்டை தொடங்குகின்றது.
இப்போது வீரத்திற்க்கும் ஆணவத்திற்க்கும் பெயர் பெற்ற அபூ ஜஹ்ல் ஏளனப் பார்வையை அவர்கள் மீது வீசியவனாக பலமாக தாக்குதல் தொடுக்கின்றான் இரு சகோதரர்களும் அதனை தடுத்தவர்களாக போரில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர் எனினும் அபூ ஜஹ்லை அவன் அமர்ந்திருக்கும் உயர்ந்தக் குதிரையின் காரணம் அவர்களால் எட்ட இயலவில்லை.
இப்போது போர் உச்சத்தை தொட்டது இச்சமயம் சகோதரர்கள் பாய்ந்து குதிரையின் கால்களை வெட்டினர் அதன் மீது மலையென வீற்றிருந்த அபூ ஜஹ்ல் பொத்தென கீழே விழுந்து சரிந்தான்.
சட்டென முஅவ்விது(ரலி) அவர்கள், முதலில் அபுஜஹல் மீது பாய்ந்தார்கள், அவனது கரண்டை கால் வரை வெட்டினார்கள், அவனது கால்கள் பறந்து வீழ்ந்தன. இதனை பார்த்த அபுஜஹலின் மகன் இக்ரிமா முஅவ்வித்(ரலி) அவர்களின் புஜத்தில் வெட்டினான், இதனால் அவரது வலது கை வெட்டப்பட்டு தோளோடு தொங்கியது அப்போதும் முஅவ்வித்(ரலி) அவர்கள் அதனை தோளில் தூக்கிப் போட்டவர்களாக சளைக்காமல் இக்ரிமாவுடன் அல்லாஹூ அக்பர்., அல்லாஹூ அக்பர்., என உரக்க மொழிந்தவராக சமர் செய்தார்கள்.
ஒரு சமயம் வெட்டுண்ட அவரின் "கை" போர் புரிய இடையூராக இருந்த காரணத்தால் அதனை தனது கால்களுக்கடியில் வைத்து பிய்த்து தூர எறிந்தவர்களாக முன்னை விட வேகமாக தீரத்துடன் போர் புரிந்தார்கள்.
ஏறத்தாழ இதே சமயம் கீழே சாய்ந்த அபுஜஹலின் மீது பாய்ந்து, முஆது அவர்கள் அவனை வெட்டித்தள்ளினார்கள்.
அல்லாஹூ அக்பர்., அல்லாஹூ அக்பர்.,
அல்லாஹூ அக்பர்.,
இறுமாப்புடன் திரிந்த இறைவனின் எதிரி அபூஜஹல் இரு சிறுவர்களின் தீரத்தால் வீழ்த்தப்பட்டான்.
எனினும் கொல்லப்படும்போது கூட, தன் தலையை மற்றவரின் தலைகளை விட உயரமாக நெஞ்சு வரை வெட்ட யாசித்தவனாக ”நான் தான் கொல்லப்படுபவர்களில் மிகவும் உயர்ந்தவனாக தெரிய வேண்டும்” என்றான், இப்போது இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் அவனது தலையை தனியாக எடுத்தார்கள்.
இந்த வேளையில், நபி(ஸல்) அவர்கள், “அபூஜஹல் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள்.
அபுஜஹலின் தலையோடு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இதோ நீங்கள் கேட்டவனுடைய தலை” என்றார்கள் அந்த இரு அன்சாரி வாலிபர்களும். அப்போது நபி(ஸல்) அவர்கள், “வணக்கத்து உரியவன் அல்லாஹ்வை தவிர வேறும் யாரும் இல்லை” என்று மூன்று முறை கூறிவிட்டு, “அல்லாஹ் மிகப்பெரியவன்! எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! அவன் தனது வாக்கை உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும் தோற்கடித்தான்”என்றார்கள். பின்பு,
.”உங்களில் யார் அவனை கொன்றது” என்று, நபி(ஸல்) அவர்கள் கேட்க, இருவரும் “நானே கொன்றேன்” என நெஞ்சை உயர்த்திக் கூறினார்கள்.
புன்முறுவல் பூத்த பூமான் நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரின் வாள்களை வாங்கி பார்த்தவர்களாக, “நீங்கள் இருவருமே அவனை கொன்றீர்கள்” என்று கூறி, அபுஜஹலின் உடமைகளை, இருவரில் ஒருவரான முஆத் அவர்களிடம் கொடுத்தார்கள். இரண்டாவது நபரான, முஅவ்விது இப்னு அஃப்ரா(ரலி) அவர்கள் இபோரில் வீரமரணம் அடைந்தார்கள்.
(நூல் : புகாரி)
பிறகு, அபுஜஹலின் உடலை தன்னிடம் காட்டும்படி நபி(ஸல்) அவர்கள் கூற, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரலி) அவர்கள் அண்ணலாரை அழைத்து சென்று காட்டினார்கள். அதனை கண்ட நபி(ஸல்) அவர்கள்,
“இவன் தான் இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்” என்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் ! தொடரும்...
ahmed buhari

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே